தியான மையத்தில் ரஜினிகாந்த் – பா.ஜனதா தலைவருடன் சந்திப்பு..!!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது ஆன்மீக அரசியல் என்றும் புதுவிளக்கம் அளித்தார்.
முதல் கட்டமாக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி நிர்வாகிகளை நியமித்து வருகிறார். பல்வேறு மாவட்ட மன்ற நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி ஆலோசனை நடத்தினார்.
கடந்த 5-ந்தேதி ரஜினி காந்த் மதுரவாயல் வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசுகையில், தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நான் தீவிர அரசியலில் ஈடுபட்டு வெற்றிடத்தை நிரப்புவேன் என்றார். மேலும் எம்.ஜி.ஆர். தனக்கு செய்த உதவிகளை நினைவு கூர்ந்த அவர் எம்.ஜி.ஆர். புகழ்பாடி பாராட்டிப் பேசினார்.
எம்.ஜி.ஆரை அவர் இந்த அளவுக்கு புகழ்ந்தது இல்லை. அரசியலுக்கு வந்த பின்பு ரஜினியின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. அதிருப்தியாளர்களை இழுக்கவே அவர் இவ்வாறு பேசியதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினி காந்த் தனது படங்கள் சம்பந்தப்பட்ட பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், ஆன்மீக பயணமாகவும் நேற்று இமயமலை சென்றார்.
இமயமலையில் இமாச் சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள ஆசிரமங்களுக்கும், தியான மையங்களுக்கும் செல்கிறார். 15 நாட்கள் வரை அவர் அங்கு தங்கி இருக்கிறார்.
நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லா வழியாக தர்மசாலா போய்ச் சேர்ந்தார்.
இது காஷ்மீர் மற்றும் திபெத் எல்லையையொட்டியுள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் திபெத்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தர்ம சாலாவையொட்டி பனி படர்ந்த மலைப்பிரதேசத்தில் கன்ட்பாடி என்ற சிறிய மலைகிராமம் உள்ளது. அங்கு பாபா ஆசிரமமும், தியான மண்டபமும் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு சென்ற ரஜினிகாந்த் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
அதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ரஜினிகாந்த் திபெத்தியர்கள் அணியும் தொப்பி அணிந்து இருந்தார்.
தியான மண்டபத்தில் இருந்த ரஜினிகாந்த்தை இமாச்சலப்பிரதேச மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரேம்குமார் துமால் சந்தித்துப் பேசினார். அப்போது ரஜினியின் அரசியல் மற்றும் ஆன்மீக பயணம் குறித்து பேசினார்கள்.
ரஜினியை ஆசிரம நிர்வாகியும் சாமியாருமான பாபா அமர்ஜோதியும் சந்தித்தார்.
இங்கு சில நாட்கள் இருந்து விட்டு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பாபா குகைக்கு சென்று வழிபடுகிறார். அங்கு ரஜினிகாந்த் ஆசிரமம் கட்டியுள்ளார். பல்வேறு பணிகளால் அதன் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்த் செல்லவில்லை. இந்தப் பயணத்தின் போது அவர் ஆசிரமத்துக்கு சென்று தங்குகிறார்.
சில வாரங்கள் கழித்து சென்னை திரும்பியதும் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவு பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார்.