நைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலி..!!

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போக்கோஹரம் பயங்கரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள ஜாரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள நைஜீரிய ராணுவ தளத்தின் மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் கடந்த வியாழன் அன்று கடும் தாக்குதல் நடத்தினர்.
பல்வேறு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவத்தை சேர்ந்த உயர்அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.