மலேசியா நிதி மந்திரி ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு..!!

மலேசியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பினாங் மாநில முதல் மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர், லிம் குவான் எங். மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது தலைமையிலான மந்திரிசபையில் தற்போது இவர் நிதி மந்திரியாக உள்ளார்.
பினாங் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இரண்டு மாடி பங்களாவை சந்தை விலைக்கு குறைவாக வாங்கியதாக இவர்மீது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தலைமையிலான அரசு குற்றம்சாட்டி, கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அப்போது அவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
இந்நிலையில், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக நடந்து வந்த வழக்கு விசாரணையின்போது அவருக்கு எதிரான குற்றச்சாட்டை தற்போதைய அரசு திரும்பப் பெற்றது. இதைதொடர்ந்து, இவ்வழக்கில் இருந்து லிம் குவான் எங்-கை விடுவித்து நீதிபதி ஹதாரியா சையத் இன்று தீர்ப்பளித்தார்.