சபரிமலைக்கு ஆதரவாளர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய கேரள போலீசார்..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
சபரிமலையில் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சபரிமலை செல்லும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்களின் கார்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இருந்து ஆதரவாளர்களுடன் இருமுடி கட்டி சபரிமலை சென்றார். இன்று காலை அவர் பத்தினம் திட்டை சென்றடைந்தார். அங்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்பு அவர் ஆதரவாளர்களுடன் காரில் சபரிமலை புறப்பட்டார். நிலக்கல் பகுதியில் அவரது காரை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பொன். ராதாகிருஷ்ணனின் காரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அனுமதிப்பதாகவும், அவருடன் வந்தவர்கள் காரில் செல்ல அனுமதியில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு பொன். ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பத்தினம் திட்டையில் கேரள மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்.
பொன். ராதாகிருஷ்ணனுடன் வந்தவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் எஸ்.பி. யதீஷ் சந்திரா, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுடன் சமரச பேச்சு நடத்தினார்.
பின்னர் பொன். ராதாகிருஷ்ணன், காரில் இருந்து இறங்கினார். ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரும் அரசு பஸ்சிலேயே பம்பை செல்வதாக தெரிவித்தார். அதன்படி அவர்கள் அனைவரும் பஸ்சில் பம்பை சென்றனர்.
இது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, அய்யப்ப பக்தர்களிடம் அரசு இந்த அளவுக்கு கெடுபிடி காட்டக்கூடாது, அரசு பஸ்சில் தான் பக்தர்கள் செல்ல வேண்டும் என்று அவர்களை வற்புறுத்த கூடாது என்றார்.