பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறேன் – நடிகை சுமலதா..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் நாகமங்கலாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு சொந்தமான காலபைரேஸ்வரா கோவிலில் நடிகை சுமலதா சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மாண்டியா மாவட்ட மக்கள் மீது அவருக்கு இருந்த அன்பு மட்டும் குறையவில்லை.
அவருடைய அந்த அன்பு, பாசத்தை நான் நிறைவேற்ற விரும்புகிறேன். எனது கணவரின் ஆசை என்னவோ அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அதற்கான காலம் விரைவில் கூடிவரும்.
எனது கணவர் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். இதனால் நான் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறேன்.
அவர் நின்று ஜெயித்த அதே மாண்டியா தொகுதியில்தான் நான் போட்டியிட விரும்புகிறேன். ஒருவேளை மாண்டியா தொகுதியில் காங்கிரசின் கூட்டணி கட்சியான ஜே.டி.எஸ். கட்சியின் வேட்பாளருக்கு டிக்கெட் கொடுத்தால் ரசிகர்களின் விருப்பப்படி நடந்து கொள்வேன்.
என்னுடைய கணவரின் ஆதரவாளர்கள், ரசிகர்கள் நான் மாண்டியாவில் சுயேட்சையாக போட்டியிட விரும்பினால் அவர்களது ஆசையையும் நிறைவேற்றுவேன்.