கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மக்கள் அதிகளவில் முகக் கவசங்களை வாங்குவதால், கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் முகமூடிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக முகக்கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி, டொக்டர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பல நோயாளிகள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதனால், முகமூடிகளுக்கான தேவை கடந்த இரண்டு நாட்களில் அதிகரித்துள்ளது.
சீன சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் முகமூடிகளை வாங்க மருந்தகங்களுக்கு விரைகிறார்கள், ஆனால் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான மருந்தகங்களில் இந்த தட்டுப்பாடு நிலவுகின்றது.
மேலும் இந்த தட்டுப்பாடுகள் காரணமாக பொதுவாக 10 ரூபாய்க்கு விற்கப்படும் முகமூடி சில இடங்களில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே இந்த தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக முகக்கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”