வுகான் நகரில் இருந்து மீட்கப்பட்ட 76 இந்தியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட வுகான் நகரில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக முதலில் இரண்டு ஏர் இந்தியா விமானங்களை வுகான் நகருக்கு அனுப்பி 647 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்தது.
இதற்கிடையே வுகான் நகரில் தவிக்கும் மேலும் சில இந்தியர்களை மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சி17 குளோபல் மாஸ்டர் ராணுவ விமானத்தில் மருத்துவ உபகரணங்களை கொண்டு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி வுகான் நகருக்கு சென்றது.
மருத்துவ உபகரணங்களை சீன அதிகாரிகளிடம் வழங்கிய பின்னர் அந்த விமானத்திலேயே 76 இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த 23 பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர், மியான்மர், மாலத்தீவை சேர்ந்த தலா 2 பேர், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடாகஸ்கர் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 112 மீட்டு கடந்த 27-ம் தேதி புதுடெல்லிக்கு அழைத்துவந்தனர்.
வுகான் நகரில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் (கோப்பு படம்)
இந்தியா அழைத்துவரப்பட்ட 112 பேரும் புதுடெல்லியில் உள்ள ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இதையடுத்து வுகானில் இருந்து இந்தியா திரும்பிய அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என பரிசோதனைகள் செய்யப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் வுகானில் இருந்து அழைத்துவரப்பட்ட 76 இந்தியர்கள் உள்பட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், வுகானில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் இன்னும் சில நாட்களுக்கு முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.