இது ஒன்றும் பயிற்சி அல்ல – கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.
சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கொரோனாவின் தாக்கம் சீனாவில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் செயல்படத்தொடங்கி உள்ளன.
உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் கொரோனா குறித்து செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இது (கொரோனா வைரஸ்) ஒன்றும் பயிற்சி கிடையாது. இது விட்டுக்கொடுக்கும் நேரமும் அல்ல. இது மன்னிப்பு கேட்கும் நேரமும் அல்ல. இது அனைத்து தடைகளையும் தாண்டி செயல்பட வேண்டிய நேரம். உலக நாடுகள் இது போன்ற நிலைமையை எதிர்கொள்ள பல ஆண்டுகளாக திட்டங்களை வகுத்துள்ளன. அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நேரம் தற்போது வந்துள்ளது’’ என அவர் கூறியுள்ளார்.