வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

கோவிட் -19 நோயினை எதிர்கொள்வதற்கு அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கோவிட் – 19, வைரஸ் கிருமியால் ஏற்படுகின்ற தொற்று நோயாகும். இது உலகளாவிய ரீதியிலும், எமது நாட்டிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்.
நாளைமறுதினம் மே மாதம் 11ஆம் திகதி முதல் நாட்டின் பொருளாதாரத்தினையும் மக்களின் வாழ்வாதரத்தினையும் மேம்படுத்தும் நோக்குடன் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆயினும் நாட்டில் கோரோனா பரம்பல் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறான ஒரு இக்கட்டான தருணத்தில் முக்கியமான சுகாதார நடைமுறைகளை வேலைத்தலங்களில் கட்டாயமாகப் பின்பற்றுவதனை உறுதி செய்து கொள்வதன் மூலமாகவே எம்மையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே விழிப்புடனும் அவதானத்துடனும் பின்வரும் நடைமுறைகளினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பணியாளர்கள், பொதுமக்கள் தம்மை கோரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குரிய வழிகாட்டுதல்களை அலுவலக வாயிலில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.
வேலைத் தலத்தினுள் நுழைவதற்கு முன் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவ அல்லது தொற்று நீக்கியை பாவித்து தூய்மைப் படுத்தவதைக் கட்டாயமாக்கவும்.
இதற்காக அலுவலகத்தின் நுழைவாயிலிலும், பொருத்தமான ஏனைய இடங்களிலும் கை கழுவும் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அல்லது தொற்று நீக்கி பாவனையை உறுதி செய்தல் வேண்டும்.
அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மையாக பேணுவதுடன்; அலுவலகத்தின் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொதுப் பயன்பாட்டிடங்கள் மற்றும் தளபாடங்கள், கதவுக் கைபிடிகள், படிக் கைபிடிகள், இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தமான தொற்று நீக்கியை பாவித்து கிரமமாக அடிக்கடி தூய்மைப்படுத்தலும் வேண்டும்.
கூடுமானவரை அலுவலகத்தின் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்திருக்கவும். குளிரூட்டிகள் மற்றும் வளிச் சீராக்கிகள் வேலைத்தளங்களில் உள்ளகங்களில் பாவிப்பது தடை செய்யப்பட வேண்டும்.
சேவை வழங்கும் இடங்களில் சேவை பெறுநர்களின் எண்ணிக்கையை அலுவலகத்தின் உள்ளேயும், வெளியிலும் மட்டுப்படுத்துவதுடன் அலுவலகப் பணியாளர்கள், சேவை பெறுனர்களுக்கிடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து கடமையாற்றுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
பணியிடங்களில் ஒன்றுகூடல்களின்போது முக்கியமான அங்கத்தவர்கள் மாத்திரம் பங்குபற்றுவதையும் போதிய தனிநபர் இடைவெளியையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
ஒன்றுகூடலின் பின் குறித்த பகுதி உடனடியாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு சேவைகளையும் குறித்தொதுக்கப்பட்ட தினங்களிலும், நேரங்களிலும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதுடன் பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்த்தல் வேண்டும்.
பணியாளர்கள் தமக்கு கோவிட்- 19 நோயின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டைநோவு போன்ற அறிகுறிகள் சிறிதளவேனும் இருந்தால் கடமைக்கு சமூகமளிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தவும்.
மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்,
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
வடமாகாணம்.
09.05.2020
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!
சலூன்களை சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு ஆலோசனை!!
கொழும்பில் சிக்கியுள்ளவர்களில் 600 பேரை இன்று சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மேலும் ஒருவர் பலி !!