பாலக்காடு அருகே சிமெண்டு லாரி கவிழ்ந்து தம்பதி உடல் நசுங்கி பலி..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஊஞ்சப்பாடம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). இவரது மனைவி சஜிதா (48). இவர்கள் நேற்று கடம்பூரில் உள்ள தங்கள் மகள் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டனர்.
அங்கு மகளை பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு புறப்பட்டனர். ஊஞ்சப்பாடம் அரசு பள்ளி அருகே வந்தபோது எதிரே சிமெண்டு ஏற்றிய லாரி வந்தது. திடீரென சிமெண்டு லாரி கட்டுப்பாட்டை இழந்து தம்பதி வந்த மொபட் மீது கவிழ்ந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இது குறித்து பாலக்காடு போலீசுக்கு தகவல் தெரிய வந்ததும் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டபோது தம்பதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
போலீசார் அவர்களை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கிருஷ்ணாபுரம் போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.