கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைதொழிற்சாலை கட்டடம் சீல் வைப்பு – சுகாதார அதிகாரிகள்!!

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய – மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யகாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் பணிப்புரியும் குளிரூட்டப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் 400 தொழிலாளர்கள் பணிப்புரிவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது, அந்த பெண்ணுடன் தொடர்புகொண்ட குழுவினர் யார் என்பதை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்த சுமார் 40 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகா தார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களான கணவர், நான்கு குழந்தைகள் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழந்தைகளில் ஒருவருக்குத் தடிமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள தாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண் பணிபுரிந்த ஆடை தொழிற் சாலை கட்டடம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.