இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி புயல்!!

இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே இரவு 9 மணியளவில் புரேவி புயலானது கரையை கடக்க தொடங்கியது. இதனால் தற்போது அங்கு மணிக்கு 80 கி.மீ. முதல் 90கி.மீ வேகத்திலான பலத்த காற்று வீசுகிறது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது. வங்கக் கடலில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று இது புயலாக மாறியது.
இது புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. மாலத்தீவுகள்தான் இதற்கு பெயரிட்டது. இந்த நிலையில் இலங்கையில் திருகோணமலை அருகே இந்த புயல் மையம் கொண்டிருந்தது. இன்று இரவு இலங்கை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பாம்பனில் இருந்து 330 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் திருகோணமலைக்கு வடக்கே மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. ஆனால் தற்போது இதன் வேகம் குறைந்துவிட்டது. தற்போது 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்த நிலையில் இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே இரவு 9 மணியளவில் புரேவி புயலானது கரையை கடக்க தொடங்கியது. இதனால் மணிக்கு 80 கி.மீ. முதல் 90கி.மீ வேகத்திலான பலத்த காற்று வீசுகிறது.
தற்போது புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது. நள்ளிரவில் குமரி கடற்கரையை நோக்கி புரேவி புயல் நகரும். இதனால் நாளை முதல் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும். குமரி கடலில் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது. மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புயல் நாளை மறுநாள் அதாவது 4-ஆம் தேதி கன்னியாகுமரி- பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.