வேலை முடியவில்லை… மின்னணு இயந்திரங்களை இரவு பகல் பாராமல் கண்காணியுங்கள் – ஸ்டாலின் அறிக்கை!!

வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் திமுக வேட்பாளர்களும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், தொண்டர்கள் கண்காணித்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளன. அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் வேலை முடிந்து விட்டது என்று நினைக்காமல் இனிதான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் என்று வேட்பாளர்களையும், தொண்டர்களையும் கூட்டணி கட்சியினரையும் கேட்டுக்கொண்டுள்ளார் மு.க ஸ்டாலின். 24 மணிநேரமும் உறங்காமல் இரவு பகல் பராமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக பாதுகாப்பதும் நமது கடமை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் பாராட்டு
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியின் பணபலம் – அதிகார பலம் ஆகியவற்றை மீறியும் ஆங்காங்கே காவல்துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் கழகத்தினரும் – கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது. அமைச்சர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் கழக வேட்பாளர்களும், கழக முன்னணியினரும் களத்தில் நின்று பணியாற்றி இன்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பேருதவியாக நின்று ஆக்கபூர்வமான ஜனநாயகக் கடமையாற்றியிருப்பது போற்றுதலுக்குரியது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும் – தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட்பாளர்கள் இருந்திடலாகாது. ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் – மதுரை மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை நாம் இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது.
கண் விழித்து காப்பது கடமை
எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகிறது. எனவே, கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் – கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட மையங்களில் மிகுந்த கவனத்துடனும் – எச்சரிக்கையுடனும், 24 மணி நேரமும் – இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.