;
Athirady Tamil News

தீபாவளிப் பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டிநிற்கிறோம்- DR ஆ.கேதீஸ்வரன்!!

0

பொதுமக்கள் அனைவரையும் தீபாவளிப் பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டிநிற்கிறோம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எமது நாட்டில் இந்துப்பெருமக்கள் தற்போது தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தற்போது நாட்டில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் தினமும் நாட்டில் 500க்கு மேற்பட்ட நோயாளர்கள் இனங்கானப்படுவதுடன், இறப்புக்களும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

இந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் எமது நாட்டில் பெரும் கோவிட்-19 தொற்றுப் பரம்பல் ஏற்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடனும், அவதானத்துடனும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றி இப்பண்டிகையை கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

இல்லாவிடின் சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டதைப் போன்று பெரும் தொற்றுப் பரம்பல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இந்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காக வர்த்தக நிலையங்களில் ஒன்று கூடும்போதும், ஆலயங்களில் வழிபாடுகளுக்காக ஒன்று கூடும்போதும் கோவிட் -19 சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்து கொள்ளல், சமூக இடைவெளியை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.

பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எனவே பொதுமக்கள் அனைவரையும் இப்பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டிநிற்கிறோம் – என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.