;
Athirady Tamil News

வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலகுமா?…!!

0

வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. சபை தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதித்து வந்துள்ளன.

இவற்றை தற்காப்பு நடவடிக்கை என்று அந்த நாடு கூறி வந்தாலும்கூட இது உலகளாவிய அச்சுறுத்தல் என்று வளர்ந்த நாடுகள் கருதுகின்றன.

வடகொரியா முதன்முதலாக 2006-ம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோதுதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முதலில் பொருளாதார தடை விதித்தது. அதன்பின்னர் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்தபோது, ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தபோது பொருளாதார தடைகளை மென்மேலும் இறுக்கியது.

இதன் காரணமாக அந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.

மற்றொரு புறம் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க அந்த நாடு தனது எல்லைகளை மூடி வைத்திருப்பதால் உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டிருப்பது அங்கு பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொருளாதார வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷியாவும் கூட்டாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன.

இதையொட்டி ஒரு வரைவுத்தீர்மானத்தை தயார் செய்து அதை உறுப்பு நாடுகளுக்கு சுழற்சியில் விட்டுள்ளன.

இந்த தீர்மானத்தில், வடகொரியாவின் பொருளாதார சிக்கல்கள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. மேலும், அந்த நாட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதி ஏற்படுவதற்கு அமெரிக்காவும், வடகொரியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்றதொரு தீர்மானத்தை இவ்விரு நாடுகளும் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்து சுழற்சியில் விட்டன. ஆனால் மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பால் அது ஓட்டெடுப்பு வரை போகவில்லை.

இந்த முறையாவது ஓட்டெடுப்புக்கு போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அமெரிக்காவும் வடகொரியா மீது கடுமையான எதிர்ப்பு மனப்பாங்கை கொண்டிருக்கவில்லை என்பதால் இந்த தீர்மானம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முக்கிய பொருளாதார தடைகள் விலக்கப்பட்டால், வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், ஜவுளி ஏற்றுமதியில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வடகொரிய நாட்டினர் தங்கள் வருவாயை வீட்டுக்கு அனுப்புவதற்கான தடை வரை அகலும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.