;
Athirady Tamil News

பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி: முகேஷ் அம்பானி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு…!!

0

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் 27 மாடி அண்டிலா பங்களா உள்ளது. இந்த வீட்டின் அருகில் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று டாக்சி டிரைவர் ஒருவர் மும்பை போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த டிரைவர், அவரது டாக்சியில் பைகளுடன் 2 பேர் வந்ததாகவும் அவர்கள் உருது மொழியில் பேசிக்கொண்டதாகவும் கூறினார். மேலும் தென்மும்பை கில்லா கோர்ட்டு பகுதியில் வைத்து 2 பேரும் முகேஷ் அம்பானியின் வீடு அமைந்து உள்ள இடம் குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக டாக்சியில் சென்றவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தென்மும்பை அல்டாமவுட் ரோட்டில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் வீட்டின் முன் தடுப்புகளும் அமைக்கப்பட்டன.

இதேபோல போலீசார் டாக்சி டிரைவர் கூறிய பகுதிகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.