;
Athirady Tamil News

2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடுமா? மத்திய மந்திரி பதில்…!!!

0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருந்தது.

2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பாக மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர்

கடந்த காலங்களில் பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில் இருந்து விலகி இருந்தன. இது அனைவருக்கும் தெரியும். அங்கு விளையாடும் போது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது பல்வேறு வி‌ஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். நேரம் வரும்போது என்ன செய்வது என்று பார்ப்போம். பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம்.

பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.

2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் நடத்த முடியவில்லை.

சமீபத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.