;
Athirady Tamil News

குழந்தைகளின் கழுத்து நிற்காதது ஏன்? (மருத்துவம்)

0

எலும்பே நலம்தானா?

குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்னைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்னைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று பெயர். பிறந்த பிறகும் சில குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம். சுருக்கமாக Torticollis எனப்படுகிற பிரச்னை கழுத்துத் தசைகளுடன் தொடர்புடையது.

காரணம் என்ன?

கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் காதுகளின் பின்னாலிருந்து கழுத்து எலும்பு வரை நீளமான தசை இருக்கும். இதற்கு எஸ்.சி.எம் அல்லது Sternocleidomastoid என்று பெயர். பிறந்த குழந்தைக்கு இந்த பிரச்னை வந்தால் ஒரு பக்க தசை சிறியதாகிவிடும்.

குழந்தை கருவில் இருந்தபோது குறுக்கி கொண்டிருந்தாலோ அல்லது தாயின் வயிற்றுக்குள் அசாதாரண நிலையில் இருந்தாலோ இந்த பிரச்னை வரலாம். குழந்தையை ஆயுதம் போட்டு வெளியில் எடுத்திருந்தாலும் இந்த பிரச்னை வரலாம்.

அறிகுறிகள் இவைதான்பிறந்த 6 முதல் 8 வாரங்களுக்கு பெற்றோரால் குழந்தையிடம் எந்த அறிகுறியையும் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைக்கு தலை மற்றும் கழுத்தில் ஓரளவு பேலன்ஸ் வந்த பிறகே கழுத்து சுளுக்கு வாதத்துக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

தாடையானது தோள்பட்டையை தொட்டபடி குழந்தையின் கழுத்து ஒரு பக்கமாக சாயும். 75 சதவிகித குழந்தைகளுக்கு வலது பக்கத்திலேயே பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது. குழந்தையால் கழுத்தை இடவலமாகவோ, மேலும் கீழுமாகவோ சுலபமாக திருப்ப முடியாது.

குழந்தையின் கழுத்துப் பகுதியில் சின்னதாக கட்டி போன்ற ஒன்றை உணரலாம். இது பயப்பட வேண்டியதல்ல. காலப்போக்கில் தானாக மறைந்துவிடும்.குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

கழுத்தை திருப்ப முடியாததே காரணம். குழந்தை மிகவும் கஷ்டப்பட்டு தன் கழுத்தை மற்ற திசைகளில் திரும்ப முயற்சிக்கும். ஆனால், அது முடியாததால் விரக்தியடையும். ஒரே பக்கத்தில் படுத்திருப்பதால் குழந்தையின் ஒரு பக்க தசைகள் தட்டையாக மாறும்.

மேலே சொன்ன அறிகுறிகளை உங்கள் குழந்தையிடம் கண்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்கவும். குழந்தையால் எந்த அளவுக்கு கழுத்தை திருப்ப முடிகிறது என்பதை மருத்துவர் பரிசோதிப்பார்.

பிரச்னையின் தீவிரத்துக்கேற்ப அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே எடுக்க சொல்வார். கழுத்து சுளுக்கு வாத பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு இடுப்பெலும்பிலும் பிரச்னைகள் இருக்கலாம். பெரும்பாலும் இந்த குழந்தைகளுக்கு வேறு எந்த பிரச்னைகளும் இருக்காது.

அரிதாக சிலருக்கு தொற்று, எலும்புகள் உடைதல், அலர்ஜி போன்றவையும் டவுன் சிண்ட்ரோம் மாதிரியான பிரச்னைகளும் வரலாம். சீக்கிரமே கண்டுபிடித்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம். பிற்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியிலும் பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்.

சிகிச்சைகள் எடுக்காவிட்டால்…

குழந்தைக்கு தன் கழுத்தில் பேலன்ஸ் இல்லாமல் போகும். பார்வையில் பிரச்னைகள் ஏற்படும். நடப்பது, உட்கார்வது என குழந்தையின் இயல்பான வளர்ச்சிகளில் தாமதம் ஏற்படும். வளைந்த நிலையில் தவழும். ஒரு பக்கமாக உருளும்.

சிகிச்சைகள்

குழந்தைக்கு பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் ஆரம்பிப்பார்கள். இது 6 மாதங்களில் குழந்தையிடம் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சீக்கிரமே கண்டுபிடித்து மருத்துவரிடம் காட்டுவதும், அவர் சொல்கிற சிகிச்சைகளை தொடர்ந்து பின்பற்றுவதும்தான் இந்த பிரச்னையை சீக்கிரமே குணப்படுத்தும். மிக அரிதாக சில குழந்தைகளுக்கு கழுத்து தசையை நீட்டும் ஆபரேஷன் பரிந்துரைக்கப்படலாம். குழந்தை ஓரளவு வளரும்வரை காத்திருந்து பிறகுதான் இது பற்றி மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

வேறு என்ன செய்யலாம்?

குழந்தைக்கு பசி ஏற்படும்போது பால் பாட்டிலை காட்டி அந்த திசையில் கழுத்தை திருப்ப வைக்க முயற்சிக்கலாம். லைட்டும், சத்தமும் உள்ள பொம்மைகளை வைத்து அது எழுப்பும் வெளிச்சம் மற்றும் சத்தம் பக்கம் திரும்ப வைக்க முயற்சிக்கலாம். கையையும் காலையும் சேர்த்து வைத்து விளையாடுவதை அனுமதியுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.