;
Athirady Tamil News

நீட் தேர்வு ஏற்படுத்தும் தாக்கம் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்யவில்லை- டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அரசு பதில்…!!

0

தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் பேசும் போது, நீட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

மருத்துவப் படிப்புக்கான அனைத்து இந்திய போட்டித்தேர்வு போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் காரணமாக சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் நலன் எவ்வகையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வு எதனையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா?

அப்படியானால் அதன் விவரம் என்ன? அத்தகைய ஆய்வேதும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன? அனைத்திந்திய அளவிலான பொது நுழைவு போட்டித்தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்படாமலும் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்திடவும் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சமூகநீதி மற்றும் அதிகாரப் பங்களித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக், ‘‘நீட் உள்ளிட்ட அனைத்திந்திய போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை’’ என தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்டு 2021 முதல், மருத்துவப் படிப்புக்கான அனைத்திந்திய கோட்டாவில், நீட் தேர்வில் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, நீட் தேர்வு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பேசும் போது ‘‘அரசியலமைப்பு சட்டம் பிரிவு 338 பி (5) ன் படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், பின்தங்கிய வகுப்பு மக்களின் உரிமைகளை பாதுகாத்து உறுதி செய்திட உரிய அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுமானால் இந்த ஆணையத்தை அணுகிப் புகார் அளிக்கலாம். அத்தகைய புகார்களை விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது எனவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.