;
Athirady Tamil News

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்!! (படங்கள், வீடியோ)

0

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு புதன்கிழமை (08) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 02 ஆசனங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில் 32 உறுப்பினர்கள் இந்த அமர்வுக்கு சமூகமளித்திருந்தனர்.

இவர்களில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 06 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 05 உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தனர். 07 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்கள், ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவருமாக 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்திருந்தனர்.
சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 05 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் பட்ஜெட் நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.