;
Athirady Tamil News

காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி மொட்டை அடித்த பெற்றோர்- தந்தை உள்பட 2 பேர் கைது…!!

0

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). திண்டிவனம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் திண்டிவனம் அருகே அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இந்த பெண் சென்னையில் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 9-ந்தேதி திருமணம்செய்ய முடிவெடுத்து வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் அந்த பெண்ணுக்கு யுவராஜ் தாலி கட்டினார்.

இந்த விவரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த யுவராஜ் இதுகுறித்து செஞ்சி போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்றதாக கூறி உள்ளார். ஆனால் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனே யுவராஜ் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க செஞ்சி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துபெண்ணை தேடி வந்தனர்.

இதற்கிடையே புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உறவினர் வீட்டில் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் பெண்ணை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிங்கவரம்கோவிலில் இருந்து தன்னை அழைத்து சென்று தென்பாலைகிராமத்தில் உள்ள உறவினர் அண்ணாமலை என்பவர் வீட்டில் தங்க வைத்தனர்.

முன்னதாக அங்கு ஏரிக்கரையில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் வைத்து குடும்ப மானத்தை கெடுத்து விட்டாய், என கூறி எனது தந்தை எனக்கு மொட்டைஅடித்து விட்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர் அண்ணாமலை, தந்தை சாமிநாதனை போலீசார் கைதுசெய்தனர்.

இது தொடர்பாக மேலும் 3பேரை தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த மகளுக்கு பெற்றோர் மொட்டை அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.