;
Athirady Tamil News

பத்தரை பவுண் தாலிக் கொடியை அறுத்தவருக்கு வலை !!

0

அக்கரைப்பற்று 7-4 பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று (11) அதிகாலையில் நுழைந்த திருடன், உறங்கிக்கொண்டிருந்த பெண்ணில் கழுத்திலிருந்த சுமார் பத்தரை (10 ½) பவுண் தாலிக் கொடியை அறுத்துச் சென்றுள்ளான்.

அந்தப் பெண்ணின் கணவரின் மணிபேர்ஸ்சையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடன், முன்கதவை உள்ளிருந்து திறந்து வைத்துள்ளார். பின்னர் மிகவும் சூட்சுமமான முறையில் கொடியை அறுத்தெடுத்து தப்பிச் சென்றுள்ளான்.

தாலி தன்கழுத்தில் இருந்து கழன்று செல்வதை உணர்ந்த அப்பெண் சத்தமிட்டு கணவரையும் எழுப்பிய போதும், ஏற்கனவே திறந்து வைத்திருந்த முன் கதவின் வழியாக, ​கள்வன் ஓடி சென்றதாக குடும்பத்தினாரால் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ்.அப்துல் மஜீத் தலைமையிலான குழுவினர் மற்றும் அம்பாறை விசேட தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலையடிவேம்பில் உள்ள வீடொன்றிலும் இதே பாணியில் பெண்ணொருவரின் தாலிக் கொடி அபகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகமான திருட்டுச்சம்பவங்கள் அதிகாலை வேளையில் இடம்பெறும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடரும் கொள்ளைச் சம்பவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். . குறிப்பாக பெண்கள் தாலி கொடியுடன் நடமாட முடியாத நிலையே தோன்றியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.