;
Athirady Tamil News

ஒமைக்ரானும் டெல்டாவும் இணைவதால் கொரோனா வைரசின் அடுத்த புதிய உருமாற்றம்…!!

0

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரசின் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. புதிய வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்களின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என்றும், டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயரிட்டது. உலகம் முழுவதும் பரவியுள்ள டெல்டா வைரசைவிட, ஒமைக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. பல நாடுகளில் டெல்டா வைரசும், ஒமைக்ரான் வைரசும் ஒரே நேரத்தில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி பால் பர்டன் ஏற்கனவே கூறுகையில், ‘ஒரு நபருக்கு ஒமைக்ரான், டெல்டா ஆகிய இருவகை கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்போது இரு வைரஸ்களின் கலவையால் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகக்கூடும். இது மிக மோசமான வைரசாக இருக்கக்கூடும்’’ என்றார்.

இதை உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிரா அரசின் கொரோனா தடுப்பு குழுவின் உறுப்பினரும் மூத்த வைரஸ் விஞ்ஞானியுமான சஷாங்க் ஜோஷி கூறியதாவது:-

டெல்டா, ஒமைக்ரான் கலவையால் உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது. இந்த கொரோனா வைரசுக்கு ‘டெல்மைக்ரான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஐரோப்பா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

டெல்மைக்ரான் வைரசால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சுனாமி போன்று கொரோனா அலைகள் ஏற்படக்கூடும். புதிய வைரஸ் ஒமைக்ரானை விட மிக மிக வேகமாக பரவக்கூடியது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி, மும்பையை சேர்ந்த பல்வேறு மருத்துவர்களும் சஷாங்க் ஜோஷியின் கருத்தை ஆதரித்தனர். ஆனாலும் புதிய உருமாறிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.