;
Athirady Tamil News

மற்றுமொரு இலங்கையர் படுகொலை!

0

சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் இம்மாதம் 10 ஆம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

பல நாட்களாக பணிக்கு வராததால் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அவர் வீட்டின் அறையில் விழுந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் உயிரிழந்திருந்தமையும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்திருந்தமையும் தெரியவந்தது.

அதன்படி, இலங்கையரின் கொலை தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அண்மையில் பாகிஸ்தானின் சியல்கோட்டில் இலங்கை முகாமையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 85 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் தற்போது பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை ஜனவரி 04ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.