;
Athirady Tamil News

கோவிட்டை மறக்கடிக்கும் டெங்கு!! (மருத்துவம்)

0

கோவிட், வைரல் ஜுரம், ஓமிக்ரான்… இப்போது டெங்கு மற்றும் டைபாய்டு என பலவிதமான வைரஸ் தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண ஜுரம் வந்தாலே அது கோவிட்டா? ஓமிக்ரானா? இல்லை டெங்குவா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஓமிக்ரான் ஒரு பக்கம் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது டெங்குவைத் தொடர்ந்து டைபாய்டு ஜுரங்களும் பரவி வருகிறது. டெங்கு மற்றும் டைபாய்டு பரவல், எவ்வாறு தற்காத்துக் கொள்வது, சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள் மருத்துவர்கள் அஸ்வின் கருப்பன் மற்றும் மதுமிதா.

‘‘டெங்கு என்பது ஒரு வித வைரஸ்’’ என்று பேசத் துவங்கினார் டாக்டர் அஸ்வின் கருப்பன். ‘‘இதில் நான்கு வகையுள்ளது. இது எல்லா வகையான ஜுரம் மாதிரிதான். டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், அது குணமான பிறகு நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதால் மறுபடியும் அந்த பாதிப்பு ஏற்படாது என்று சொல்வார்கள். அது அப்படி இல்லை. நான்கு விதமான இந்த வைரல் பாதிப்பில் வேறு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

டெங்கு பொதுவாக கொசுவினால் ஏற்படும் வைரல் பாதிப்பு. இதில் இரண்டு வகையான பாதிப்பு ஏற்படும். ஒன்று டெங்கு கொசு கடிப்பதால் ஏற்படும். மற்றொன்று டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களை சாதாரண கொசு கடிக்கும் ேபாது, அந்த கொசுவிற்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட கொசு மற்றவர்களை கடிக்கும் போது, அவர்களுக்கு டெங்கு நோயின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்களை ஜீப்ரா கொசு என்று சொல்வது வழக்கம். இந்த கொசு நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும். அதனால் மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி பாத்திரத்தில், டயர் மற்றும் இதர பொருட்களில் தண்ணீர் சேகரித்து வைக்காமல் பாதுகாக்க வேண்டும்.

மேலும் இந்த கொசு கொஞ்சம் சோம்பேறி என்பதால், 400 மீட்டர் சுற்றளவில் தான் அட்டாக் செய்யும். அந்த சுற்றளவை தாண்டி இந்த கொசு வெளியே செல்லாது. அதனால் தான் ஒரு வீட்டில் பாதிப்பு ஏற்பட்டால், அது மத்தவங்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் தான் டெங்கு ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் வந்தால் அந்த குறிப்பிட்ட இடத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்.

பாதுகாக்கும் முறை

*தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*நம்முடைய சுற்றுவட்டாரத்தை குப்பை இல்லாமல் சுத்தமாக வைத்துக் ெகாள்ள வேண்டும்.
*கொசு மருந்து அடிக்கலாம்
*செல்ஃப் பாதுகாப்பு. தூங்கும் போது கொசு வலை பயன்படுத்தலாம். கொசு கடிக்காமல் இருக்க இயற்கை மூலிகை கொண்ட கிரீம்கள் பயன்படுத்தலாம்.
*இந்த கொசு மாலை ஆறு மணிக்கு மேல் மற்றும் விடியற்காலையில் கடிக்கும் என்பதால், அந்த நேரத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
*மாலை ஆறு மணிக்கு மேல் ஜன்னலை மூடிவிட்டு காலை வெயில் வந்ததும் திறக்கலாம்.

சிகிச்சை முறை

இது குணப்படுத்தக்கூடிய நோய் தான் என்பதால் பயப்பட தேவையில்லை. இடைவிடாமல் காய்ச்சல் இருக்கும். கண்களுக்கு பின் அதிகமாக வலி இருக்கும், மூட்டு வலி ஏற்படும், உடல் சேர்வு ஏற்படும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலர் சாதாரண ஜுரம் என்று நினைத்துக் கொண்டு மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவார்கள். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் காய்ச்சல் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லை என்றால் பிளேட்லெட்ஸ் குறைந்து அதிக அளவில் பாதிப்பு ஏற்படும்.

டெங்குவை பொறுத்தவரை இதற்கு என்ற தனிப்பட்ட மருந்து கிடையாது. ஜுரத்திற்கான மாத்திரை மற்றும் டிரிப்ஸ் மூலம் தான் இதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து பிளேட்லெட்ஸ் அளவு அதிகரிக்கும். மேலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். டெங்கு கொசுவினால் ஏற்படும் வைரஸ் பாதிப்பு ஒரு வாரம் வரை உடலில் இருக்கும். அதன் பிறகு அந்த வைரஸ் பாதிப்பு முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் படிப்படியாக குறைந்துவிடும்.

நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே பிளேட்லெட்ஸ் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலும் எல்லாரும் மருந்து மாத்திரைகளிலேயே குணப்படுத்திடலாம். டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு என்றால் அது 1% தான். அதுவும் அவர்கள் சரியான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள தவறினாலோ உடல் ரீதியாக வேறு பிரச்னை இருந்தால் மட்டுமே உயிர் பாதிப்பு ஏற்படும். மற்றபடி ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டாலே குணமாகிடும்.

உணவு முறைகள்

இதற்கென தனிப்பட்ட உணவு முறைகள் இல்லை. தண்ணீர், பழச்சாறு நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். காரம், மசாலா மற்றும் எண்ணை பதார்த்த உணவினை தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கு மென்மையான பருப்பு, ரசம், காய்கறி சூப், பழங்கள் போன்றவற்றை எடுத்துக்ெகாள்ளலாம். அந்த நேரத்தில்என்ன சாப்பிட முடிகிறதோ எடுத்துக் கொள்ளலாம். டெங்குவிற்கு பப்பாளி இலையினை அரைத்து சாறாக சாப்பிட சொல்கிறார்கள். இது இப்போது மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இந்த மாத்திரை ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். சிலருக்கு வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுத்தும். அவர்கள் இந்த மாத்திரையினை தவிர்த்துவிடலாம். மேலும் இதை மட்டுமே நம்பி இருக்காமல் டாக்டரின் ஆலோசனைப்படி உரிய முறையில் ஆய்வு செய்து சிகிச்சை பெறுவது அவசியம்’’ என்றார் டாக்டர் அஸ்வின் கருப்பன்.

இவரைத் தொடர்ந்து டாக்டர் மதுமிதா டைபாய்டு ஜுரத்தை பற்றி விளக்க ஆரம்பித்தார். மழைக்காலம் என்றாலே சாலை முழுதும் தண்ணீர் தேங்கி நிற்கும். அதுமட்டுமில்லாமல் எங்கு பார்த்தாலும் சாக்கடையில் இருந்து கசிவு ஏற்படும். டைபாய்டு ஜுரம் ஏற்பட இவை இரண்டுமே முக்கிய காரணம். மழை தண்ணீர் தேங்குவது மற்றும் அந்த தண்ணீரில் சாக்கடை தண்ணீர் கலங்குவது.

தண்ணீர் தேக்கத்தினால் கொசு பிரச்னை ஏற்படும். தண்ணீர் கலங்குவதால் உடல் உபாதைகள் ஏற்படும். நம்மை அறியாமல் சாக்கடை தண்ணீர் நல்ல தண்ணீருடன் கலக்கும் போது, அதை நாம் சரியான முறையில் கவனிக்காமல் பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு விளைவு டைபாய்டு, காலரா மற்றும் கேஸ்ட்ரோஎன்டெரிடிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இவை அனைத்தும் தண்ணீரால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்.

டைபாய்டு ஜுரம் நமக்கு புதுசு கிடையாது. இது நம்முடன் காலம் காலமாக இருந்து வரும் உடல் உபாதை. குறிப்பாக மழைக் காலத்தில் இந்த பிரச்னை அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. டைபாய்டு தண்ணீரால் மட்டுமே ஏற்படும் என்று சொல்லிட முடியாது. சரியான முறையில் சமைக்கப்படாத உணவு மூலமாகவும்
ஏற்பட வாய்ப்புள்ளது.

டைபாய்டு ஏற்பட காரணிகள்

*அழுக்கு தண்ணீரில் சமைக்கப்படும் உணவுகள்.
*அழுக்கு தண்ணீரில் கழுவப்படும் காய்கறி, பழங்கள்.
*முழுமையான சமைக்கப்படாத உணவுகள்
*சுத்தம் செய்யப்படாத தண்ணீர்
*வெளி உணவுகளை சாப்பிடுவதால்

நாம் சில வருடமாக கேன் தண்ணீருக்கு பழகிவிட்டோம். அப்படியே ேகன் தண்ணீர் வாங்குவதாக இருந்தாலும், அதை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நன்கு கொதிக்கப்பட்ட தண்ணீரில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும், பாதுகாப்பானது. கேன் தண்ணீரையே கொதிக்க வைக்கும் போது வீட்டில் நாம் பயன்படுத்தும் சாதாரண தண்ணீரையும் அவ்வாறே செய்வது நல்லது. ஆர்.ஓ போன்ற பில்டர்களை பயன்படுத்தினாலும் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.

உணவுகளை சமைக்கும் முன் நல்ல தண்ணீரில் கழுவி, நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். சரியான முறையில் கழுவப்படாத காய்கறி மற்றும் பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிட்டாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுவது நல்லது. வெளியே சாப்பிட நேரிட்டால், நல்ல தரமான ஓட்டலில் சூடான உணவினை சாப்பிட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களையும் தங்களை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்வது அவசியம். கழிவறை சென்று வந்தால், உடனடியாக கையினை சோப் கொண்டு நன்கு கழுவும் பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.

டைபாய்டு ஜுரம் பாதிப்பு இருந்தால் உடல்வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஜுரம் போன்ற பாதிப்பு ஏற்படும். இரண்டு நாட்களில் ஜுரம் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், மருத்துவமனையில் தங்காமல் வீட்டில் இருந்தபடியே டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

எந்த ஒரு நோயின் தாக்கம் ஏற்பட்டாலும் ஒருவரின் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினை பொருத்து தான் பாதிப்புண்டாக்கும். டைபாய்டு குடலில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரமான, எண்ணை பதார்த்தம் மற்றும் மசாலா நிறைந்த உணவினை தவிர்ப்பது நல்லது. பால், காபி, டீ தவிர்த்து தயிர் மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பர்சனல் ஹைஜீன் மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்’’ என்று ஆலோசனை கூறினார் டாக்டர் மதுமிதா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.