;
Athirady Tamil News

சட்டப்பேரவைத் தேர்தலை 6 நாட்கள் தள்ளி வைக்க பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை…!!

0

பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தலை 6 நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு கோரி, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

குரு ரவிதாஸின் பிறந்தநாள் பிப்ரவரியில் வருவதாக, மாநிலத்தின் 32 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த சில பிரதிநிதிகள் எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில், மாநிலத்தில் இருந்து சுமார் 20 லட்சம் பட்டியலின சாதி பக்தர்கள், பிப்ரவரி 10 முதல் 16 வரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸுக்கு செல்வார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியாது. வாக்களிப்பது அவர்களின் அரசியலமைப்பு உரிமை. அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பங்கேற்பதற்காக, பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை பனாரஸுக்குச் செல்லக்கூடிய வகையில் தேர்தல் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு தேதியை குறைந்தது ஆறு நாட்களுக்கு ஒத்தி வைக்கலாம். இது நியாயமானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.

இதனால் சுமார் 20 லட்சம் மக்கள் மாநில சட்டப்பேரவைக்கு வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும். இவ்வாறு தமது கடிதத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் தலைவர் ஜஸ்விர் சிங் கர்ஹியும் தேர்தல் தேதியை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.