;
Athirady Tamil News

அருணாசலப் பிரதேச சிறுவனை ஒப்படைக்குமாறு சீனாவிற்கு இந்தியா கோரிக்கை…!!

0

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அதை தெற்கு திபெத் என்று அழைத்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் உள்ள 5 இடங்களின் பெயர்களையும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17) என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன ராணுவம் அவனை கடத்தி சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து அவனை கடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

மேல் சியாங் மாவட்டத்தின் ஜிடோ கிராமத்தில் வசிக்கும் மிரன் தரோன், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் வேட்டையாடச் சென்ற போது சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இந்திய சிறுவன் மாயமானது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், சீன ராணுவம் சட்டத்துக்கு உட்பட்டு எல்லைகளை கண்காணிக்கிறது. அத்துடன் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது. ஆனால் சிறுவன் மாயமான இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.