;
Athirady Tamil News

புதிய தொழிற்துறைகளை வளர்த்தெடுப்பதனூடாகவே யாழ் மாவட்ட வறுமைநிலையை தீர்க்க முடியும். – அங்கஜன் இராமநாதன். !!

0

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, சமுர்த்தி குடும்ப வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்ச்சிதிட்டத்தின் சுற்றுலாத்துறை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (28.01.2022) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக , யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், “சமுர்த்தி திணைக்களத்தால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியை பூர்த்தி செய்த இளைஞர்கள் யுவதிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியதாகும். சுற்றுலாத் தொழிற்துறையில் இருக்கும் பணியாளர்களுக்கான தேவைப்பாட்டை நிவர்த்தி செய்யவும், புதிய தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதும் இக்கற்கை நெறியால் சாத்தியப்படுகிறது.

அத்துடன் எமது மாவட்டத்தை வறுமையிலிருந்து மீ்ட்டெடுக்க நாம் புதிய தொழில்களை ஆரம்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது. அவற்றை ஆரம்பிக்க முறையான தொழிற்பயிற்சிகள் எமது இளைஞர்களுக்கு வழங்கப்படும்போது அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளும் வலுப்பெறும்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் முன்னேறிவரும் சுற்றுலாத்துறையில், நிலைத்த வருமானத்தை உருவாக்க இத்தகைய கற்கைநெறிகள் அவசியமாக உள்ளது. எனவே இக்கற்கைநெறியை பூர்த்திசெய்த நீங்கள் அனைவரும் எம்மாவட்டத்தின் பெறுமதி மிக்க தொழில்வல்லுனர்களாக அமையவுள்ளீர்கள்.

மேலும் நாடு எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சனையை நிறைவுக்கு கொண்டுவர உங்களது பங்களிப்பும் பிரதானமாக அமையவுள்ளது. நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் துறையில் பணியாற்றவுள்ள நீங்கள், நாட்டின் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளாக செயற்படவுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதுவரைகாலமும் பல்கலை கழக வாய்ப்பை இழந்த இளைஞர்கள் யுவதிகளுக்கு எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் தற்போது அத்தகையவர்களும் சிறந்த எதிர்காலத்தை பெறும்வகையில் போதிய தொழில்துறை பயிற்சிகளை வழங்க அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

உங்களுக்கான எதிர்காலம் தொடர்பான அச்சமின்றி, நீங்கள் முன்னெடுக்கும் வெற்றிப்பயணத்துக்கான தயார்படுத்தல்களை இந்த கற்கைநெறி தந்துள்ளது. எனவே வாய்ப்புகளை உருவாக்கி வெற்றியை சுவீகரித்து குடும்பத்துக்கும் மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெறுமதி சேர்க்க எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்றார்.

இந்நிகழ்வில் 16 வகையான பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த, 52 இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன், சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திரு. விஸ்வரூபன், சிரேஸ்ட முகாமையாளர் திரு. ரகுநாதன், யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பயினுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.