;
Athirady Tamil News

இலங்​​கைக்கு அவுஸ்திரேலியா உதவி!!

0

சிறந்த சர்வதேச நடைமுறைகள், இலக்கை நோக்கி பணியாற்றுவதற்காக கணினி பொறியியல் மாதிரியின் பயன்பாடு, முழுமையான மற்றும் நவீன கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவுவதற்கான இலங்கையின் குறிக்கோள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து, வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு அண்மையில் பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்ட சந்திப்பொன்றை நடாத்தியது.

பாரிய அளவிலான அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், இரசாயணங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய பொருட்களால் சமுத்திரத்தை மாசுபடுத்தி மோசமான பேரழிவை ஏற்படுத்திய எம்-வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்திற்குப் பின்னர், கடல்சார் பேரழிவுகளை நிர்வகிப்பது குறித்த அவுஸ்திரேலிய அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

2021 மே 20ஆந் திகதி இலங்கையின் கடற்கரையில் தீப்பிடித்து எரிந்த எம்-வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியிருந்ததுடன், அது இலங்கையை மட்டுமன்றி, இந்து சமுத்திரத்தின் பல கரையோர நாடுகளையும் பாதிப்படையச் செய்திருந்தது. பல நாட்களாக அது இலங்கையின் கடற்கரையில் எரிந்து கொண்டிருந்தமையினால், பல மைல்களுக்கு அப்பால் அடர்ந்த இருண்ட புகை மண்டலம் காணப்பட்டது. எனினும், எம்-வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தற்போது மௌனமாகி அதன் அரைவாசிப் பகுதி இலங்கையின் கரையோரத்தில் மூழ்கிக் கிடக்கின்ற அதே வேளை, அதன் மேற்பகுதி ஆழமற்ற கடற் படுக்கையில் உள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ள போதிலும், பிரச்சினைகள் இப்போதுதான் ஆரம்பித்துள்ளன. இதற்கு முன்னரும் கப்பல் விபத்துக்கள் பல இடம்பெற்றுள்ளன எனினும், இது போன்ற நச்சுப் பொருட்களை இலங்கை சந்தித்ததில்லை.

இந்த சம்பவத்தில் ஏதேனும் மாற்றமாக இருக்க வேண்டுமானால், எதிர்காலத்தில் கடல்சார் பேரழிவுகளைத் தடுப்பதற்காகவும் அதற்குப் பதிலளிப்பதற்காகவும் அதிக மீள்திறன் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான ஊக்கியாக செயற்படுதல் அவசியம் என இந்த சந்திப்பிற்கு தலைமை தாங்கிய சமுத்திர அலுவல்கள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பதில் மேலதிக செயலாளர் திருமதி. ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போதுமான திறன் அபிவிருத்தியுடன் அதனை செயற்படுத்துவதற்கான நிறுவன அடிப்படையை வலுப்படுத்தி, கடல்சார் இடர் தயார்நிலைத் திட்டத்தை உருவாக்குவதன் மூலம் கடல்சார் அவசரகாலத் தயார்நிலை மற்றும் முகாமைத்துவதற்திற்கு முன்னுரிமை அளிப்பதை இது குறிக்கின்றது.

இதனை அடைவதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் சர்வதேச நண்பர்கள் மற்றும் பங்காளிகளின் கூட்டு முயற்சி அவசியம் என இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு டேவிட் ஹோலி தெரிவித்தார். அத்தகைய ஒருங்கிணைப்பு வெற்றிகரமான முடிவிற்கு முக்கியமானது என்பதால், இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த இலங்கை அரசாங்கத்திற்கும் குறிப்பாக வெளிநாட்டு அமைச்சுக்கும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஆதரவு திறம்பட வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, சர்வதேச உதவிகளை ஏற்றுக்கொள்வதற்கும் வசதிகளை வழங்குவதற்கும் ஒரு பொறிமுறையை அமைக்க வேண்டும் என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

கடல்சார் இடர் தயார்நிலையில் அவுஸ்திரேலியாவின் அணுகுமுறை இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்காது என மாண்புமிகு டேவிட் ஹோலி மேலும் வலியுறுத்தினார். எவ்வாறாயினும், இலங்கைக்கு மிகவும் பொருத்தமான அமைப்பை உருவாக்குவதற்கான திறனை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கையில் இவ்வாறான கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் இருப்பது இலங்கைக் கடற்பரப்பில் மற்றும் இலங்கையின் தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் ஏற்படும் அனர்த்தங்களை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமன்றி, இந்து சமுத்திரத்தில் உள்ள ஏனைய நிறுவனங்களுக்கு துணைபுரியும் பிராந்திய மையமாக செயற்படுவதற்கும் உதவும் எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கடல்சார் இடர் ஆயத்தப் பொறிமுறை / அதிகார சபைக்கான இலங்கையின் தேவைகள் குறித்து இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வை.என். ஜயரத்னவினால் விளக்கப்பட்ட அதே வேளையில், இலங்கையின் கடல் சுற்றாடல் பாதுகாப்புத் தேவைகள் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி திருமதி. தர்ஷனி லஹதபுரவினால் விளக்கப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் துறைமுகப் பிரதானி திரு. நிர்மல் சில்வா எம்-வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் தற்போதைய சிதைவுகளை அகற்றும் செயன்முறை குறித்த சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார்.

அவுஸ்திரேலியா தனது சொந்த நிறுவனமான அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணைக்குழுவை அமைப்பதில் முன்னுரிமையளிக்கப்பட்ட கணினி பொறியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி, இலங்கையில் கடல்சார் இடர் முகாமைத்துவ ஆணைக்குழுவை நிறுவுவதற்கான பரிசீலனைகள் குறித்த கருத்துக்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் முன்வைத்தார். அவுஸ்திரேலிய மாதிரியானது இலங்கைக்கான சிறந்த அமைப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை எனினும், கணினி பொறியியல் அணுகுமுறை ´தேவைகளை´ விட ´அவசியமானவைகளில்´ கவனம் செலுத்துவதை உறுதி செய்யும் என்பதனால், இது எமது தற்போதைய திறன் மற்றும் வளங்களின் அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்க உதவும் என அவர் மேலும் விளக்கினார்.

வெளிநாட்டு அமைச்சு 2021 செப்டம்பரில் இலங்கைக்கான கடல்சார் இடர் தயார்நிலை பொறிமுறைக்கான ஆரம்ப வேலை வரைவை உருவாக்கியதுடன், மேற்படி பொறிமுறையை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சிடம் இந்த செயன்முறையை ஒப்படைத்தது. இந்தக் குழு தற்போது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து பொறிமுறையை சிறப்பாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் கடல் மாசுபாடு மற்றும் உடனடி மீட்புப் பிரச்சினையை உலக அளவில் எடுத்துச் செல்வதற்காக பங்குதாரர்களுடன் வெளிநாட்டு அமைச்சு இணைந்து செயற்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.