;
Athirady Tamil News

இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை!!

0

ஒரு பிரதேசத்திற்கோ மாகாணத்திற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) பிற்பகல் தெரிவித்தார்.

கிரம – கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒஸ்திரிய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கிரம-கடுவான நீர் வழங்கல் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 34 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

வராபிட்டியவிலுள்ள கிரம நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று வெலந்தகொடவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து அப்பகுதியில் வசிக்கும் சுமார் 26,000 மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வலஸ்முல்ல, கிரம, கட்டுவன, மித்தெனிய வீதியில் 24 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை பொருத்தி குடிநீர்ப் பிரச்சினையை அதிக அளவில் தீர்ப்பதற்கு முடிந்துள்ளது.

சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரம பேருந்து நிலையம் மஹிந்த சிந்தனை புரநெகும திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து நிலையமானது ஆறு கடை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, எண்பத்தைந்து இடைத்தேர்தலின் போது நாங்கள் இங்கு வந்து கிரம பகுதியில் இருந்து பிரசாரம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் காலத்திலும் அதற்கு முன்னரும் உங்களது பெற்றோர், இந்த இளைஞர்களின் பெற்றோர் உள்ளிட்ட குழுக்கள் இந்தப் பிரதேசத்தில் எமக்கு ஆதரவளித்தனர்.

அதனுடன் இன்று பல புதிய அபிவிருத்தி முன்மொழிவுகள் இந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ளன.

குறிப்பாக நம் அனைவருக்கும் தண்ணீர் தேவை. எமது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் இன்று காலை எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கும் தற்போது இப்பிரதேச மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துகிறார். மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம். ஏனெனில் அது எல்லா பக்கங்களிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்கும் பகுதிகளில், நோய் பாதிப்பு குறைவாக உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது இந்த மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி முழு நாட்டிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதனால் அன்று நாம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கின. சர்வதேச துறைமுகங்கள், விமான நிலையங்கள், இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் அனைத்தும் நம்மைப் பழிவாங்கும் எண்ணத்தில் கடந்த அரசால் நிறுத்தப்பட்டது. எதுவும் செய்யவில்லை. யாரை பழிவாங்கினார்கள்? இறுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களையும், மொனராகலை மாவட்ட மக்களையும் இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி நாடெங்கும் உள்ள எமது மக்களையே இவர்கள் பழிவாங்கினர்.

இன்று மீண்டும் எம்மீது நம்பிக்கை வைத்து எம்மை வென்று ஆட்சியை அமைத்துள்ளீர்கள். எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அரசாங்கத்தை அமைத்து சேவையாற்றி வருகிறார். இன்று காலை எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற அபிவிருத்தி நிகழ்வில் நானும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டோம். இவ்வாறாக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு புதிய அபிவிருத்தி ஏற்படும். மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

எனவே, தொழில்துறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களையும் உங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான புதிய திட்டங்களையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டங்களையும், நாட்டின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அதன் மூலம் மக்களின் பல கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் இந்த நாட்டில் ஒரு புதிய போக்கு உருவாகியுள்ளது. நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்ந்தது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையிலும் செயற்படுத்தப்பட்டது.

வடக்கு, தெற்கே, கிழக்கு அல்லது மேற்கு இந்த அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தியும் ஒரே சீரான முறையில் நடைபெற்ற யுகமொன்று எமக்கு இருந்ததில்லை.

எனவே, இப்பிரதேசத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த திரு.வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு இன்று நாம் குறிப்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு. குறிப்பாக இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டில் உடனடியாக அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அபிவிருத்தி இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியாது.

எனவே அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழில் துறைகளை உருவாக்கி முன்னோக்கி செல்வோம் என்ற செய்தியை இந்த மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம். எனவே, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கட்டுவன-கிரம நீர் வழங்கல் திட்டம் உங்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.