;
Athirady Tamil News

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தம்…!!

0

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன.

தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு 2 நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி இன்று காலை 6 மணிக்கு தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது. 30-ந் தேதி காலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, தபால், வருமான வரித்துறை, செம்புத்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கக்கூடும் என பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி போன்றவை தெரிவித்து உள்ளன.

தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் போக்குவரத்து, ரெயில்வே மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய துறைகளின் சேவைகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சார வசதி தடையின்றி கிடைக்க ஆவன செய்யுமாறு மத்திய மின்சார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவமனை, ரெயில்வே, ராணுவம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனாலும், போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.