;
Athirady Tamil News

மருத்துவ பேரிடருக்குள் சிக்கவுள்ள யாழ். போதனா!!!

0

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது ஓர் மருத்துவப் பேரிடரினைக் கட்டியம் கூறியுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

அவர் இன்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சத்திர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் பல பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது. இதனால் அவசர சத்திரசிகிச்சை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்திரசிகிச்சை தவிர்ந்த ஏனைய சத்திரசிகிச்சைகள் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மயக்கமருந்துகள், சேலைன், சத்திரசிகிச்சையில் அதிகமாகத் தேவைப்படும் பெட்டடின் உட்பட பல மருந்துகள் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே உபயோகிக்கக்கூடியதாக உள்ளது. புற்றுநோய்களுக்கான சிகிச்சை உட்பட பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் பொதுமக்களை விழிப்படைய வைத்தல் அவசியம் தேவை. விபத்துக்கள், குழு மோதல்கள் கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து தற்போதைய சூழலை எதிர்கொள்ள அனைவரும் உதவுதல் வேண்டும். மேலும் வைத்தியசாலைச் சமூகம் மருத்துவ சேவையினைத் தொடர மனித நேய மருத்துவ அவசர உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.