;
Athirady Tamil News

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்!!

0

நாட்டில் தற்போதுள்ள பண வீக்கத்திற்கு மத்தியில் மீண்டும் மீண்டும் பணத்தை அச்சிடுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு , தள்ளுவண்டியில் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலைமையே ஏற்படும்.

பாணின் விலை 400 ரூபா வரை உயர்வடையும். எனவே பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்கள் அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (27 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டை நிர்வகிப்பதற்கும் , அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும் மேலும் 1 டிரில்லியன் பணம் அச்சிடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒரு டிரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி ரூபாவாகும். இவ்வாறு பணத்தை அச்சிட வேண்டாம் என்று பிரதமரிடம் கோருகின்றோம்.

இந்த தொகை பணம் அச்சிடப்பட்டால் பாண் இறாத்தலொன்றின் விலை 400 ரூபா வரையும் , பால்மா பக்கட்டின் விலை 1000 ரூபா வரையும், பெற்றோல் லீற்றரொன்றின் விலை 600 ரூபா வரையும், சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 10 000 ரூபா வரையும் உயர்வடையக் கூடும்.

இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சுய தொழில் செய்வோருக்கும், தனியார் துறையினருக்கும் , சிறு தொழில்களில் ஈடுபடுவோருக்கும் , அன்றாடம் உழைத்து உண்போருக்கும் வாழ முடியாத சூழல் ஏற்படும்.

இவர்களுக்கு 3 வேளையும் உண்ண முடியாத நிலைமையும் ஏற்படும். சர்வதேசத்திடமிருந்து நிதியுதவிகள் கிடைக்கப் பெறும் வரை இவ்வாறு பணத்தை அச்சிட்டு பண வீக்கத்தை அதிகரிக்காமல் , மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு கடன் செலுத்த வேண்டியுள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பவற்றுக்கு சில தனியார் நிறுவனங்களினால் சுமார் 9000 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டியுள்ளது.

அந்த நிறுவனங்களிடமிருந்து குறித்த பணத்தொகையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் மேலும் அதிகரிக்கும்.

பணம் இருந்தாலும் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்படும். பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடையும். பணவீக்கத்தை அதிகரித்து பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக தள்ளுவண்டியில் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி விட வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.