;
Athirady Tamil News

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகம்: பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை..!!

0

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன.

இதனால் ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை.

தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார்.

அப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதின் அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மேற்கத்திய நாடுகளின் நிலைமை மேலும் சீர்குலையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் கூறும்போது, உக்ரைன் துறைமுகங்களில் சிக்கியுள்ள தானியங்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய ரஷியா தயாராக இருப்பதாக பிரான்ஸ், ஜெர்மனி தலைவர்களிடம் புதின் தெரிவித்தார்.

உலக சந்தைகளுக்கு தானியங்களை வழங்குவதில் உள்ள சிரமங்களுக்கு மேற்கத்திய நாடுகளின் தவறான பொருளாதார மற்றும் நிதிக்கொள்கைகளே காரணம் என்றும் புதின் தெரிவித்தார்.

இவ்வாறு கிரெம்ளின் மாளிகை தெரிவித்தது. பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தானிய ஏற்றுமதியை அனுமதிக்க உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீதான முற்றுகையை கைவிடுமாறு ரஷியாவிடம் பிரான்ஸ், ஜெர்மனி தலைவர்கள் வலியுறுத்தினர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நேரடி யாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உடனே போர் நிறுத்தத்தை அறிவித்து ரஷிய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று புதினிடம் வலியுறுத்தினர்.

மேலும் மரியுபோல் நகரத்தில் உள்ள உருக்காலையில் இருந்து போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட 2,500 உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறும் கேட்டு கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.