;
Athirady Tamil News

கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தில் நடந்தது என்ன? – இருவர் உயிரிழப்பு!

0

மன்னாரில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று (30) மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் நேற்று (30) இரவு நான்கு நபர்கள் கொழும்பு நோக்கி பயணித்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தில் பயணம் செய்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களுக்கும் திடீர் சுகயீனம் ஏற்பட்டது.

இதன் போது உடனடியாக குறித்த வாகனம் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு வந்த போது குறித்த இரு குடும்பஸ்தா்களும் வாகனத்தினுள்ளேயே உயிரிழந்தனர்.

மேலும் குறித்த வாகனத்தில் வந்த மற்றைய இருவரும் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது-26) மற்றும் காட்டாஸ் பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது-35) ஆகிய இரு இளம் குடும்பஸ்தர்களே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

தற்போது உயிரிழந்த குடும்பஸ்தர்களின் சடலங்கள் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றைய இருவரிடம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.