;
Athirady Tamil News

பெங்களூருக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.28 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!!

0

ஆந்திராவில் இருந்து பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கட்டிகேனஹள்ளி என்ற கிராமத்திற்கு சரக்கு ஆட்டோவில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக கம்மகொண்டனஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒசக்கோட்டையில் இருந்து கட்டிகேனஹள்ளி செல்லும் சாலையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்திய போது காய்கறி பெட்டிகள் இருந்தன.

ஆனாலும் வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அந்த சரக்கு ஆட்டோவில் தொடர்ந்து சோதனை நடத்தினர். அப்போது காய்கறி பெட்டிகளின் அடியில் மறைத்து வைத்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் அந்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரிடம் வனத்துறையினர் விசாரிக்க முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் தங்களது ஜீப்பில் அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர். வனத்துறையினர் விரட்டி வருவதை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 2 பேர் தப்பி சென்று விட்டனர். பின்னர் அந்த ஆட்டோவை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அந்த ஆட்டோவில் இருந்த 564 கிலோ செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.28 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த செம்மரக்கட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த மர்மநபர்கள் முயன்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.