;
Athirady Tamil News

கடற்படையினரால் 91 பேர் கைது!!

0

இலங்கை கடற்படையினர் மாரவில பகுதியில் மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 91 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படைக் குழு ஒன்று மாரவில பொலிஸாருடன் இணைந்து நேற்று காலை மாரவில பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அப்போது அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து இந்த நாட்டிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டில் குடியேற தயாராகி வந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற சந்தேகநபர்கள் அடங்கிய குழுவொன்றை கைது செய்தனர்.

இதன்போது, 13 ஆண்கள், ஒரு (01) சிறுவன் மற்றும் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்த ஒரு நபர் உட்பட 09 முதல் 58 வயதுக்குட்பட்ட பதினைந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட 4 ஆவது படைப்பிரிவின் P 481 படகின் வீரர்கள் நேற்று பிற்பகல் சிலாபம் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலை அவதானித்து ஆய்வு செய்தனர்.

அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 58 ஆண்கள், 05 பெண்கள், 07 குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 06 நபர்கள் உட்பட ஒன்று முதல் 62 வயது வரையிலான 76 பேர் குறித்த படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில விடுதியில் இருந்து கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிலாபம் கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபட தூண்டும் ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி உயிரையும் உடமைகளையும் பணயம் வைத்து தீவில் இருந்து இடம்பெயர்வதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறான பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பாழடைந்த மீன்பிடி கப்பல்கள் கடலுக்கு செல்லக்கூடியவை அல்ல என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இந்த கப்பல்கள் மூலம் இடம்பெயர்வதற்கு முயற்சிப்பது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என கடற்படையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.