;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் – எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு அதிகளவில் தேவை என்பதால் மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர், தென் மாநிலங்களை ஒன்றிணைத்து சரத்பவாரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி டெல்லி, கேரளா, தமிழகம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில முதல் மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஜூன் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.