;
Athirady Tamil News

குழந்தை வெள்ளையாக இருந்ததால் பூட்டால் தாக்கி கொடூரமாக கொன்ற தந்தை..!!

0

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியை சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வீணா. தம்பதிக்கு திருமணமாகி முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. தற்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியில் உள்ள பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீணாவிடம் நான் கருப்பாக இருக்கிறேன்.

உனக்கு பிறந்த குழந்தை வெள்ளையாக உள்ளதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த ரங்கா முரளி வீணா இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. தனக்கு பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக்கூடாது என கூறியபடி அருகே இருந்த பூட்டை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் ஆத்திரம் அடங்காத ரங்கா முரளி மனைவியை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்ய முயன்றார். சுதாரித்துக்கொண்ட வீணா கணவரை தள்ளிவிட்டு வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடினார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்ற வீணா தனது குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். வீணாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த ரங்கா முரளியை பிடித்து கர்னூல் 4-வது டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தந்தையே தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.