;
Athirady Tamil News

உணவு உதவிகளை வழங்க நிதி நன்கொடையை வழங்குமாறு உலக உணவுத்திட்டம் வேண்டுகோள்..!!

0

பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு அவசியமான உணவுசார் உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியை ‘உணவைப் பகிருங்கள்’ செயற்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு உலக உணவுத்திட்டம் கோரிக்கைவிடுத்துள்ளது.

உலக உணவுத்திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டுவரும் ‘உணவைப் பகிருங்கள்’ (ஷெயார் த மீல்) செயற்திட்டத்தின் ஊடாக பொதுமக்களிடமிருந்து நன்கொடை மற்றும் அன்பளிப்பு அடிப்படையில் நிதி திரட்டப்பட்டு, நாடளாவிய ரீதியில் வறிய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, பாடசாலை மாணவர்களுக்கான போசணை உணவு மற்றும் உணவைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவி என்பன வழங்கப்படும்.

அதன்படி கடந்த காலங்களில் வறிய மக்களுக்கான உணவு விநியோகத்திற்குப் பங்களிப்புச்செய்ய விரும்புபவர்கள் தம்மால் இயலுமான நிதியை உலக உணவுத்திட்டத்தின் ‘உணவைப் பகிருங்கள்’ செயற்திட்டத்திற்கு வழங்கிவந்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் பெருமளவானோர் தாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள 3 மில்லியன் மக்களுக்கு அவசியமான உணவுசார் உதவிகளை வழங்குவதற்கான செயற்திட்டமொன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்ததாக உலக உணவுத்திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அச்செயற்திட்டத்தின் ஊடாக வறிய மக்களுக்குத் தேவையான உணவு உதவிகளை வழங்குவதற்கு அவசியமான நிதியை ‘உணவைப் பகிருங்கள்’ செயற்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு உலக உணவுத்திட்டம் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.