;
Athirady Tamil News

மஞ்சள் ஆடை அணிந்த கிரிக்கெட் ரசிகர்கள் – சஜித் குற்றச்சாட்டு!!

0

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையிலும் கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மஞ்சள் ஆடை அணிந்து இறுதிப் போட்டிகளை பார்வையிட ஏற்பாடு செய்த நிகழ்வை,வங்குரோத்து அரசியலில் ஈடுபடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிகளால் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற முன்னெடுப்பதற்காக அதனைப் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த மாபெரும் வெற்றிக்காக ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் இருக்கும் இந்நேரத்தில், வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தாம் பெரும் விரக்தி நிலையே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நெருக்கடியான நிலையிலும் இலங்கை வந்ததற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், அந்நாட்டு அரசுக்கும், அவுஸ்திரேலியா மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், இவர்களின் வருகை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நமது நாட்டின் மீது விதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணத் தடையை நீக்கிவிட்டு மீண்டும் எமது நாட்டுக்கு வருமாறு வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறே, இலங்கை கிரிக்கெட் அணியின் சாதனைகள் குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை அரசியல்மயமாக்க முயற்சிக்கும் மொட்டுக்கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் பிற துணை அலைவரிசைகளின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பேரிடரிலிருந்து விடுவிக்கும் முகமாக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் ஆர்வலர்களின் கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி, இது தொடர்பாக ஒரு நடைமுறை சார்ந்த வேலைத்திட்டத்தை உருவாக்கும் பொறுட்டு, இலக்கை அடையும் உபாய வரைவுக்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்கான நிகழ்வொன்று இன்று (24) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னணி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

“நாட்டைக் காப்பாற்றும் நடவடிக்கையை” வெல்வதற்கான வழிமுறைகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.