;
Athirady Tamil News

திருப்பதி மலைப்பாதையில் யானை கூட்டம் வாகனங்களை மறித்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!!

0

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கார் பஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஏழுமலையான் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் அங்கு யானை, சிறுத்தை, கரடி, மான், பாம்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் வன விலங்குகள் அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள மலை சாலைக்கு வருகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்த 12 பெரிய யானைகள் மற்றும் 2 குட்டி யானைகள் திருமலையிலிருந்து அலிபிரி செல்லும் 7-வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தது. அப்போது யானைகள் கூட்டம் பிளிறியபடி ஆக்ரோஷத்துடன் மரக்கிளைகளை தும்பிக்கையால் உடைத்து வீசி எறிந்தது. இதையடுத்து சாலைக்கு வந்த யானை கூட்டம் சாலையில் கும்பலாக நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் சுமார் 2 மணி நேரம் மலைப்பாதையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைக்கூட்டம் வனப்பகுதிக்கு சென்ற பிறகு அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.