;
Athirady Tamil News

19ஐ விஞ்சும் வகையில் 22ஆம் திருத்தம் வரும் !!

0

நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

22ஆம் திருத்த சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 22 ஆம் திருத்தத்திற்கு உப இணைப்புகள் சிலவற்றை உள்ளடக்கினார். அது மீண்டும் நிறைவேற்று அதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், இப்போது அரசாங்கம் முழுமையாக மாறியுள்ள காரணத்தினால் மீண்டும் அமைச்சரவையில் யோசனை ஒன்றினை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த இணைப்புகளை நீக்கி மீண்டும் 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19 ஆம் திருத்தத்தை விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அறிவுறுத்தியுள்ளேன்.

குறித்த சட்டமூலம் அமைச்சரவை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த திங்கட்கிழமை அமைச்சரவையில் அனுமதியை பெற்ற பின்னர் வர்த்தமானி அறிவித்தலுக்கு விடவும், அடுத்த ஏழு நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அரசியல் அமைப்பு திருத்தத்தை கொண்டுவரவும், அதேபோல் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்கவும் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

பாதுகாப்பபு அமைச்சு ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை, இந்த அரசியல் அமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு மாற்றப்பட வேண்டும் என்றால் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும். அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.