;
Athirady Tamil News

பல கோடி ரூபாய் பணம் பதுக்கல்- மேற்கு வங்காள நடிகையின் 4 கார்களை தேடும் அமலாக்கத்துறை..!!

0

மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். அர்பிதாவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 50 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த 4 கார்களைக் காணவில்லை. இவ்வழக்கு தொடர்புடைய மேலும் கோடிக்கணக்கான பணம் அந்த கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய கார்களை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டபோது, ​​ஒரு வெள்ளை நிற மெர்சிடிஸ் காரை மட்டும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போன கார்களை தேடும் பணி நடைபெறுகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியும் அந்த கார்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை பதவியில் இருந்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆகஸ்ட் 3ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.