;
Athirady Tamil News

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக பிடியாணை உத்தரவு!!

0

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம் வீசுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கில் சுகாதார உயர் அதிகாரிகள் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் உள்ளிட்ட எட்டு பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (02) செவ்வாய்க்கிழமை மூன்றாவது தடவையாக கல்முனை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்சார் மன்றில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக கல்முனை நீதவானினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த வழக்கு செப்டம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது கல்முனை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்; சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள இடமொன்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்சாரை பணித்து காலக்கெடுவும் விதித்திருந்த நிலையில் அவர் இதுவரை எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் இன்றைய வழக்கு விசாரணைக்கும் சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.