;
Athirady Tamil News

தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்: ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!!

0

பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்ப்பதை விடுத்து நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்
மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மாற்றி அமைப்பதற்காகவும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இன்னோரன்ன தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வகையிலும் வரிசையில் நின்று பொருட்களை பெரும் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலும் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு நல்குவோம் எனவும் இச்சந்திப்பில் உறுதியளித்துள்ளோம்.

மேலும், காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறி வைத்து கைது செய்யப்பட்டமை மற்றும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைது தொடர்பிலும் எமது ஆட்சேபனையையும் கவலையையும் தெரிவித்தோம்.

இவ்வாறான பயமுறுத்தல் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

19 ஆவது திருத்தத்தை உடனடியாகக் கொண்டு வந்து, அதனை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும், நாடாளுமன்றத்தில் அமைச்சுக்களை கண்காணிக்கும் குழுக்களை அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தோம்.

பொருளாதார நெருக்கடி தொடர்பான விளக்கம்
அத்துடன், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி வகைதொகையின்றி ஆட்களை கைது செய்யும் நடவடிக்கையை உடன் நிறுத்துவதுடன் அவசரகாலச் சட்டத்தில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினோம்.

மேலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த காலங்களில் நாட்டினதும், மக்களினதும் நலனைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டமையை உணர்த்தினோம்.

இதற்கமைய இனவாதத்தை விதைப்பதன் ஊடாக தங்களது அரசியல் இருப்பு நீடிக்கும் என்ற எண்ணத்தை கொண்டு செயற்பட்டதனால்தான் இந்த நாடு இவ்வாறான கீழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

ஆகையால் எதிர்காலத்தில் இனவாத சக்திகளின் கரங்களை ஓங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.