;
Athirady Tamil News

தசரா யானைகள், மைசூருவுக்கு வந்தன; நாளை மறுநாள் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது..!!

0

மைசூரு தசரா விழா
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ் பெற்றதாகும். ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி என்னும் யானைகள் ஊர்வலம் நடக்கும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால் தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. ஜம்பு சவாரி, அக்டோபர் 5-ந்தேதி நடக்கிறது. தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள் தேர்வு செய்யப்பட்டது. அதாவது துபாரே, மத்திகோடு, ராம்புரா முகாம்களில் இருந்து அபிமன்யு, பீமா, கோபாலசாமி, அர்ஜூனா, விக்ரமன், தனஞ்ஜெயா, காவேரி, கோபி, விஜயா, சைத்ரா, லட்சுமி, பார்த்தசாரதி, ஸ்ரீராமா, மகேந்திரா ஆகிய 14 யானைகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமக்க உள்ளது.
இதில் நேற்று அபிமன்யு, அர்ஜூனா, காவேரி, தனஞ்ஜெயா, பீமா, கோபாலசாமி, மகேந்திரா உள்ளிட்ட 9 யானைகள் மைசூரு மாவட்டம் உன்சூரில் உள்ள வீரனஒசஹள்ளிக்கு கஜபயணத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கஜபயணம்
இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று வீரனஒசஹள்ளியில் கஜபயணம் நடத்தப்பட்டது. தசரா யானைகளின் கஜபயணத்திற்கான நிகழ்ச்சியில் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி. சோமசேகர், வனத்துைற மந்திரி உமேஷ்கட்டி, கலெக்டர் பகாதி கவுதம், உன்சூர் தொகுதி எம்.எல்.ஏ., எச்.பி.மஞ்சுநாத், மைசூரு மாநகராட்சி மேயர் சுனந்தா பாலநேத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அபிமன்யு உள்பட 9 யானைகளை குளிப்பாட்டியபின் அர்ச்சகர்கள், பாகன்களின் உதவியுடன் யானைகள் நெற்றி, கால்கள் உள்ளிட்ட இடங்களில் மஞ்சள்-குங்குமம் தடவி மாலை அணிவித்து அலங்கரித்து சுபமுகூர்த்த நேரமான காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் சிறப்பு பூஜை செய்தனர். மேலும் யானைகளுக்கு கரும்பு, கொப்பரை தேங்காய், வெல்லம், வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மந்திரி எஸ்.டி.சோமசேகர், தசரா யானைகளின் கஜபயணத்தை தொடங்கி வைத்தார். அதன்படி மேளதாளங்கள் முழங்க யானைகளின் கஜபயணம் தொடங்கியது.

மைசூருவுக்கு வந்தன
அதன்படி வீரனஒசஅள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கஜபயணம் நடந்தது. தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை முன்செல்ல அதன்பின்னால் ஒவ்வொரு யானைகளும் பின்தொடர்ந்து சென்றன. அதற்குபிறகு 9 யானைகளும், தனித்தனியான லாரிகளில் ஏற்றி மைசூரு அசோகபுரத்தில் உள்ள பவனத்திற்கு அனுப்பப்பட்டது. நேற்று மாலை லாரிகள் மூலமாக அசோகபுரம் பவனத்திற்கு வந்த 9 யானைகளுக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 9 யானைகளும், பவனத்தில் தங்கவைக்கப்பட்டது. வருகிற 10-ந்தேதி தசரா யானைகள், மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.