;
Athirady Tamil News

காஷ்மீர்: தோடா, ஜம்முவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

0

டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் மொஹ்சின் அகமது என்பவரின் குடியிருப்பு வளாகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.

உறுப்பினர் மொஹ்சின் அகமது, சமூக ஊடகம் வழியே, பயங்கரவாதத்திற்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதுடன், இளைஞர்களை தவறாக வழி நடத்தும் எண்ணத்துடன் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டி, அதனை சிரியா மற்றும் பிற நாடுகளுக்கு கிரிப்டோகரன்சி வடிவில் அனுப்பியுள்ளார். இதன் வழியே ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகளை தீவிரப்படுத்த முயன்றுள்ளார். தனது தொழில்நுட்ப அறிவால், புலனாய்வு அமைப்புகளிடம் சிக்காமல் அவர் தப்பி வந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையில் உள்ள அகமது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தது எப்போது மற்றும் அவரது கூட்டாளிகள் எல்லாம் யார் என்றும் தெரிந்து கொள்வதற்கான கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த மொஹிசினை 7 நாட்கள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளது. நாடு முழுவதும், விடுதலை பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் ஓராண்டுக்கு நடந்து வருகின்றன.

அடுத்த ஒரு வாரத்தில் நாட்டில் சுதந்திர தினமும் கொண்டாடப்பட உள்ள சூழலில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீரில் தோடா மற்றும் ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து காஷ்மீர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் (சி.பி.ஆர்.எப்.) உள்ளிட்டோர் அந்த பகுதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி உள்ளனர்.

சோதனை நடைபெறும் பகுதிகளுக்குள் ஒருவரும் உள்ளே நுழையாதபடிக்கும், வெளியே ஒருவரும் செல்லாதபடிக்கும் தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்படும் நோக்கிலும் அவர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டும் தோடா மற்றும் ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற சோதனைகள் நடந்தன. இதற்கு முன்பு, வடகாஷ்மீரின் பாராமுல்லா, பூஞ்ச், குப்வாரா பகுதிகள் உள்பட 7 இடங்களில் மாநில புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.