;
Athirady Tamil News

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பினர் ஒருபோதும் ஏற்க மாட்டோம்: சிறிதரன்!!

0

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் குறிப்பாக விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளி வந்திருக்கின்றன.

அது தொடர்பிலே பல்வேறுப்பட்ட கருத்துக்கள் நியாயங்கள் எங்களிடம் கேட்கப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட பிரச்சினைகளாக பல விடயங்களை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். அது தொடர்பில் நாங்கள் டலஸ் அழகப்பெருமவிற்க்கு எழுதிக் கொடுத்த விடயங்களையே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை சந்தித்தபோதும் இந்த விடயங்களை அவருக்கு கூறி இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் அன்றாடம் சந்தித்து வருகிற முக்கியமான பிரச்சினைகளான அரசியல் கைதிகளுடைய விடுதலை முதற்கட்டமாக ஒரு சிறு தொகையினரை யாவது விடுதலை செய்ய வேண்டும்.

அத்தோடு அந்த காணி விடயங்களில் அதிக அக்கறை இந்த அரசாங்க செலுத்த வேண்டும்.

மக்களுடைய அன்றாட பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்பது தொடர்பில் பரிசீலிக்கலாம்.

கடந்த ஆட்சியின் போது அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களாக பலரை இணைத்து அதில் ஒரு முடிவெடுக்கக்கூடிய நிலை இருக்கவில்லை.
வடக்கு ஆளுநருடைய செயற்பாடு பாரதூரமானது

இன்று வடக்கு ஆளுநருடைய செயற்பாடு மிகவும் பாரதூரமாக காணப்படுகின்றது. ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் எடுத்த தீர்மானத்தை நிராகரித்து வடக்கு ஆளுநர் அலுவலகத்தினால் கடிதம் அனுப்பும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன ஏன் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும். இது ஒரு கண் துடைப்புக்கு மக்களை ஏமாற்றுவதற்காக வேண்டி அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும்.

இலங்கையினுடைய பொருளாதாரம் என்பது அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும்.

பொருளாதார பிரச்சினை என்பது வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது. எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம்.

ஆனால் அபிவிருத்தி குழு தலைவர் பதவிகளை நாங்கள் ஏற்பதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் அனைவருடனும் பேசி ஒரு தீர்வினை எடுப்போம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.