;
Athirady Tamil News

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்!!

0

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை. சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.

அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.